ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய   'கந்தர் சஷ்டி கவசம்'

 

        குறள் வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,

நிஷ்டையுங் கைகூடும்,

நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

        காப்பு

அமரர் இடர்தீர அமரம் புரிந்த

குமரன் அடி நெஞ்சே குறி.

 

        நூல்

சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்

சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாட கிண்கிணி யாட

மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்        ... ... 5

 

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து

வர வர வேலா யுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திர முதலா எண்திசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக        ... ... 10

 

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக        ... ... 15

 

சரஹணபவனார் சடுதியில் வருக

ரஹண பவச ரரரர ரரர

ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி

விணபவ சரஹண வீரா நமோ நம

நிபவ சரஹண நிறநிற நிறென        ... ... 20

 

வசர ஹணப வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னை ஆளும் இளையோன் கையில்

பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்

பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க        ... ... 25

 

விரைந்தெனைக் காக்க வேலோன்வருக

ஐயும் கிலியும் அடைவுடன்செளவும்

உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்

கிலியும் செளவும் கிளரொளி ஐயும்

நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும்        ... ... 30

 

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்

குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்

நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்        ... ... 35

 

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகு குண்டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

பல் பூஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்        ... ... 40

 

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழகுடைய திருவயிறு உந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீராவும்

இருதொடை அழகும் இணைமுழந்தாளும்        ... ... 45

 

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண        ... ... 50

 

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து        ... ... 55

 

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோதனென்று        ... ... 60

 

உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்

என்தலை வைத்துன் இணையடி காக்க

என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க        ... ... 65

 

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க        ... ... 70

 

முப்பத் திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை இரத்ன வடிவேல் காக்க        ... ... 75

 

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க

பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதி னாறும் பருவேல் காக்க        ... ... 80

 

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க

நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க

ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க        ... ... 85

 

வட்டக் குதத்தை வல்வேல் காக்க

பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க

கைக ளிரண்டும் கருணைவேல் காக்க        ... ... 90

 

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க

பின்கையிரண்டும் பின்னவள் இருக்க

நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனை வேல் காக்க        ... ... 95

 

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனக வேல் காக்க

வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

அறையிருள் தன்னில் அனையவேல் காக்க        ... ... 100

 

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க        ... ... 105

 

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்        ... ... 110

 

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்

அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட

இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்        ... ... 115

 

கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட

ஆனை அடியினில் அரும்பாவைகளும்        ... ... 120

 

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பலகலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்        ... ... 125

 

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட        ... ... 130

 

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோட

படியினில் முட்ட பாசக்க யிற்றால்

கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கால்கை முறிய        ... ... 135

 

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்        ... ... 140

 

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலது வாக

விடு விடு வேலை வெருண்டது வோட

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட        ... ... 145

 

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்        ... ... 150

 

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி

பக்கப் பிளவை படர் தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத்து அரணை பருஅரை யாப்பும்        ... ... 155

 

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்

நில்லா தோட நீ எனக் கருள்வாய்

ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்        ... ... 160

 

உன்னைத் துதிக்க உன் திருநாமம்

சரஹண பவனே சைலொளி பவனே

திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவம்ஒளி பவனே

அரிதிரு மருகா அமரா பதியைக்        ... ... 165

 

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்

கந்தா குகனே கதிர்வேலவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே

இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா

தணிகா சலனே சங்கரன் புதல்வா        ... ... 170

 

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பால குமாரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா

சமரா புரிவாழ் சண்முகத் தரசே        ... ... 175

 

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்நா இருக்க யான் உனைப் பாட

எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்

பாடினேன் ஆடினேன் பரவசமாக

ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை        ... ... 180

 

நேச முடன்யான் நெற்றியில் அணியப்

பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னருளாக

அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்

மெத்த மெத் தாக வேலா யுதனார்        ... ... 185

 

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்        ... ... 190

 

வாழ்க வாழ்க வாரணத்துவசம்

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை யடியேன் எத்தனை செய்தால்

பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்        ... ... 195

 

பெற்றவள்குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து

மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்

தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய        ... ... 200

 

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேச முடன்ஒரு நினைவது வாகி

கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்        ... ... 205

 

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்

திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்        ... ... 210

 

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்

கந்தர்கை வேலாம் கவசத் தடியை        ... ... 215

 

வழியாற் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்துரு சங்கா ரத்தடி        ... ... 220

 

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்

வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்

சூரபத்மாவைத் துணித்தகை யதனால்

இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்        ... ... 225

 

சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவ போற்றி

தேவர்கள் சேனா பதியே போற்றி

குறமகள் மனமகிழ் கோவே போற்றி        ... ... 230

 

திறமிகு திவ்விய தேகா போற்றி

இடும்பா யுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெட்சி புனையும் வேளே போற்றி

உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே        ... ... 235

 

மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்

சரணம் சரணம் சரஹண பவ ஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்.

 

        ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.